search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை சட்டசபை"

    • 2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.
    • மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    ஆனால் புதுச்சேரி சட்டசபையில் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கிய சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ந்தேதி மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டது. ஒருநாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிடுவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வருகிற 22-ந் தேதி காலை 9.45 மணிக்கு புதுவை சட்டசபை கூடுகிறது.

    அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனேகமாக 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

    சட்டசபை கூடும் தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    2024-25-ம் நிதியாண்டுக்கான மானிய திட்ட முன்வரைவு பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துகை செய்யப்படும். பேரவை முன்வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும்.

    2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழிற்சாலையில் கழிவு பொருட்கள் ஏற்றிய வாகனத்தால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
    • இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக நடத்தப்பட்ட நாடகமா? என விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் காலாப்பட்டு ரசாயன தொழிற்சாலை மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுப்புற சூழலையும், சுனாமி குடியிருப்பு மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் காப்பாற்றிட வலியுறுத்தி புதுவை சட்டசபை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் வடசென்னை தெற்கு, (கிழக்கு) மாவட்ட செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் புதுவை அ.தி.முக. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    தொழிற்சாலையில் கழிவு பொருட்கள் ஏற்றிய வாகனத்தால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. விபத்துக்கு காரணமான அந்த வாகன காண்ட்ராக்டர் யார்? அவர் திட்டமிட்டு அந்த விபத்தை ஏற்படுத்தினாரா? என்பது குறித்தும், அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக விபத்தை ஏற்படுத்தி அதற்குரிய இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக நடத்தப்பட்ட நாடகமா? என விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதே அவர்களின் உடல் நிலைமையை கருத்தில் கொள்ளாமல் இங்கிருந்து 4 மணி நேரம் மரண அவஸ்தையுடன் நோயாளிகளை சிகிச்சைக்கு அரசின் அனுமதியோடு கொண்டு சென்றனரா? அவ்வாறு கொண்டு செல்ல அதிகாரம் அளித்தது யார்? போகும் வழியிலேயே ஒரு நோயாளி மரணமடைந்திருந்தால் அதற்கு பொறுப்பு யார்?

    ஜிப்மர் டாக்டர்கள் மறுத்தும் சென்னைக்கு கொண்டு சென்றது சம்பந்தமாக மருத்துவ புலனாய்வு நிபுணர்களை கொண்டு உயர்மட்ட விசாரணைக்கு முதலமைச்சர், கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர பாஸ்கர், மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டு ரங்கன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி வருகிறார்.
    • பிரதமர், உள்துறை மந்திரி, மத்திய மந்திரிகளை அனைத்து எம்.எல்.ஏ.க்களோடு முதல்-அமைச்சர் தலைமையில் சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஏற்கனவே 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் மாநில அந்தஸ்து பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

    புதுவையில் பா.ஜனதா-என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய ஆட்சியாளர்களோடு இணக்கமான ஆட்சி புதுவையில் நடந்து வருவதால் இந்த காலக்கட்டத்தில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலிலும் மாநில அந்தஸ்து பெறுவோம் என அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதி அளித்தன.

    கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு 14-வது முறையாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானம் கடந்த ஜூலை மாதம் கவர்னர் தமிழிசை ஒப்புதலோடு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை அரசின் தீர்மானத்திற்கு மத்திய அரசு கடிதம் மூலம் பதிலளித்துள்ளது.

    இந்த கடிதத்தில் தற்போதைய நிலையே புதுவையில் தொடரும் என குறிப்பிட்டுள்ளது. இதனால் யூனியன் பிரதேசமாகவே புதுவை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதுவை அரசியல் கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையே தொடரும் என தெரிவித்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அனுப்பப்பட்ட தீர்மானங்களை பற்றி மத்திய அரசு தெரிவிக்கவில்லை. 2022-23-ம் ஆண்டில் புதுவை சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மாநில அந்தஸ்தை வலியுறுத்திய அரசு தீர்மானத்தின் மீது மத்திய அரசு பதிலளித்துள்ளது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி வருகிறார். மீண்டும் சட்டசபையில் மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் கொண்டு வரப்படும். பிரதமர், உள்துறை மந்திரி, மத்திய மந்திரிகளை அனைத்து எம்.எல்.ஏ.க்களோடு முதல்-அமைச்சர் தலைமையில் சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம்.

    நிதி கமிஷனில் புதுவையை சேர்க்க வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. நிதி கமிஷனில் முதலில் புதுவை சேர்க்கப்படும். பின்னர் மாநில அந்தஸ்து கோரிக்கை வலுப்பெறும். சிலவற்றில் மட்டும்தான் மத்திய அரசு புதுவையை யூனியன் பிரதேசமாக கருதுகிறது. மற்ற அனைத்து விஷயங்களிலும் மாநிலமாகவே கருதுகிறது. அதன்படி புதுவையிலேயே உள்ள அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்ள மத்திய உள்துறை தெரிவிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திராயன், ஜி20 மாநாடு வெற்றி ஆகியவற்றுக்கு பிரதமருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து பேசினார்.
    • சபாநாயகரிடம் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை இன்று காலை கூடியது. இரங்கல் குறிப்புக்கு பிறகு எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து பேசினர்.

    எதிர்க்கட்சித்தலைவர் சிவா, மகளிருக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை அனைத்து தொகுதிகளிலும் செயல்படுத்தாதது, தொகுதியளவில் நடைபெற வேண்டிய பணிகள், மக்கள் நல பணிகளை செயல்படுத்தாதது ஆகியவை குறித்து சபையில் விவாதிக்க வேண்டும்.

    அனைத்து பிரச்சனைகளுக்கும் தலைமை செயலாளரும், அதிகாரிகளும்தான் காரணம் என கூறுகின்றனர். அதுகுறித்தும் விவாதிக்க வேண்டும் என கூறினார்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இதே கருத்தை வலியுறுத்தினர். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, அலுவல் முடிந்தவுடன் பேச அனுமதிப்பதாகவும், உறுப்பினர்கள் அனைவரும் அமரும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

    9.45 மணியளவில், சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை பேச அனுமதிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி எதிர்கட்சித்தலைவர் சிவா வெளிநடப்பு செய்தார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், காங்கிரஸ் எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

    இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திராயன், ஜி20 மாநாடு வெற்றி ஆகியவற்றுக்கு பிரதமருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து பேசினார்.

    அப்போது மீண்டும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிவா தலைமையில் சபைக்கு வந்தனர். அவர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று, அலுவல் பட்டியலில் இல்லாததை எப்படி பேசலாம்? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு சபாநாயகர், நன்றி அறிவிப்பு அலுவல் பட்டியலில் இடம்பெறாது என தெரிவித்தார். இதனால் சபாநாயகரிடம் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • முதல் நிகழ்வாக இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார்.
    • சட்டசபையில் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சமர்ப்பித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் மைய மண்டப படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சமாதானப்படுத்தி தன் அறைக்கு அழைத்து சென்றார். இதனால் சட்டசபை நிகழ்வுகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    9.37 மணிக்கு சட்டசபை நிகழ்வுகள் தொடங்கியது. முதல் நிகழ்வாக இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார். இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜி20 மாநாடை வெற்றிகரமாக நடத்தியுள்ளதற்கும் சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது ஆகியவற்றுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

    தொடர்ந்து சட்டசபையில் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சமர்ப்பித்தார்.

    தொடர்ந்து 2023-ம் ஆண்டு புதுவை எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழத்தலை தடுத்தல் திருத்த சட்ட முன்வரைவை அமைச்சர் லட்சுமிநாராயணனும், சரக்கு மற்றும் சேவை வரி திருத்த முன்வரைவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் தாக்கல் செய்தனர்.

    இந்த மசோதாக்கள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணிக்கு சபையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    புதுவை சட்டசபை 23 நிமிடத்தில் முடிவடைந்தது.

    • சந்திராயன், ஆதித்யா விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஜி-20 மாநாடை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் ஆகியவையும் சட்டசபையில் பிரச்சினையை கிளப்ப முடிவெடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது.

    6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதியின் அடிப்படையில் நாளை (செவ்வாய்க்கிழமை) சட்டசபை கூடுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    பின்னர், சந்திராயன், ஆதித்யா விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஜி-20 மாநாடை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

    புதுவையில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசு, பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்படுகிறது.

    இதற்கிடையே உறுதியளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசுக்கு எதிராக சட்டசபையில் உண்ணாவிரதம் இருப்பேன் என பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம் அறிவித்துள்ளார். சட்டசபை கூடும் நாளை அவர் உண்ணாவிரதம் இருப்பாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அதோடு, என்.ஆர்.காங்கிரஸ் அரசு அமைந்து 2 ஆண்டுகளை கடந்தும் ரேஷன் கடைகளை திறக்கவில்லை, அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தாதது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஆகியவற்றை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் ஆகியவையும் சட்டசபையில் பிரச்சினையை கிளப்ப முடிவெடுத்துள்ளது.

    இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் நாளை காலை சட்டமன்றம் கூடுகிறது.

    • சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.
    • கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 9-ந் தேதி கவர்னர் தமிழிசை உரையுடன் தொடங்கியது.

    13-ந்தேதி நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 14 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 31-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

    சட்டசபையை 6 மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி இந்த மாதத்தில் சட்டசபையை கூட்ட வேண்டும். இதற்காக வருகிற 20-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபை கூடுகிறது. இதை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

    ஆனால் அன்றைய தினம் ஒரு நாள் மட்டுமே சட்டசபை நடைபெறும் என தெரிகிறது. இந்த கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

    அதேநேரத்தில் எதிர்கட்சிகள் தரப்பில் பேனர் கலாச்சாரம், சிலிண்டருக்கு மானியம் வழங்காதது, ரேஷன்கடைகளை திறக்காதது, மாநில அந்தஸ்தை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமரை சந்திக்காதது குறித்து பிரச்சனையை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.

    • பரந்த நில பரப்பில் தலைமை செயலகத்துடன் இணைந்த சட்டமன்ற வளாகம் அமைக்க கடந்த 2000-ம் ஆண்டு முதலே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஏற்கனவே 4 முறைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், நில தேர்வில் சிக்கல் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற வளாகம் கடற்கரை சாலை அருகில் பாரதி பூங்கா எதிரே சுமார் 87 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது.

    கடந்த 1820-ம் ஆண்டு பிரெஞ்சு அரசால் கட்டப்பட்ட இந்த கட்டிடம் மருத்துவமனையாக இருந்தது. 1959-ம் ஆண்டில் இருந்தே சட்டசபை வளாகமாக செயல்படுகிறது. 200 ஆண்டுகள் பழமையான சட்டமன்ற கட்டிடம் புதுவையின் 19 பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாகும்.

    பழமையான கட்டிடம் என்பதால் மைய கட்டிடம் வலுவிழந்துள்ளது.

    இந்த நிலையில் பரந்த நில பரப்பில் தலைமை செயலகத்துடன் இணைந்த சட்டமன்ற வளாகம் அமைக்க கடந்த 2000-ம் ஆண்டு முதலே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே 4 முறைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், நில தேர்வில் சிக்கல் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் 2021-ல் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைந்த என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசு புதிய சட்டமன்ற வளாகத்தை உருவாக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

    அதன்படி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை சதுக்க பகுதியில் 15 ஏக்கரில் சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் இணைந்த புதிய சட்டமன்ற வளாகம் கட்டப்படவுள்ளது. மொத்தம் 15 ஏக்கரில் 5 ஏக்கர் பரப்பளவுக்கு பேரவைக் கட்டிடங்கள் அமையவுள்ளன. ரூ.400 கோடியில் புதிய சட்டமன்ற வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதில் பொதுமக்கள் சபை நடவடிக்கையை நேரில் பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் பேரவை கூட்ட அரங்குடன் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கான நவீன அறைகள், காபினட், கமிட்டி அறைகள் அமையவுள்ளது. பேரவை வளாகம் தரைத்தளத்துடன் 5 மாடிகள் கொண்டதாக அமையவுள்ளது.

    பேரவை வளாகத்தையொட்டி தலைமை செயலகமும், சட்டமன்ற செயலகம், நூலகம் உள்ளிட்டவையும் அமைய உள்ளது.

    தலைமை செயலகம் தரை தளத்துடன் 4 மாடிகளுடன் அமைய உள்ளது. அதோடு உட்புற சாலைகள் 7 மீட்டர் அகலத்திலும், நடைபாதை 2 மீட்டர் அகலத்திலும் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. இதோடு ஹெலிகாப்டர் இறங்கு தளமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பேரவைக் கட்டிடமானது பல மாநிலங்களின் சட்டப்பேரவைகளை ஆராய்ந்து அதில் இருந்து தனித்து சட்டப்பேரவை கட்டிட மாதிரியாக அமையும் வகையில் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகம் கட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய பிரதேசம் நொய்டாவை சேர்ந்த எனார்க் கன்சல்டன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்த நிறுவன அதிகாரிகள் கட்டிடத்துக்கான மாதிரி வரைப்படத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் காண்பித்தனர். புதுவை பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியர் சத்தியமூர்த்தி விளக்கினார்.

    இந்த வரைபடத்துக்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு டெண்டர் விடப்படும்.

    இதன் பிறகு புதிய சட்டமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.

    • 36 ஆண்டுகளாக 13 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு தான் புதுவை நிர்வாகத்தை நடத்துகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.

    அப்போது, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தனி நபர் தீர்மானத்தை எதிர்க்கட்சித்தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு ஆகியோர் கொண்டு வந்தனர்.

    5 பேரின் தனி நபர் தீர்மானங்களையும் இணைத்து விவாதிக்க சபாநாயாகர் ஏம்பலம் செல்வம் அனுமதியளித்தார்.

    எதிர்க்கட்சித்தலைவர் சிவா: மத்திய அரசு நிதி பற்றாக்குறை, அதிகாரிகள் அலட்சியம், கவர்னர் அரசை நிலைக்குலைய செய்தல் ஆகியவை பற்றி சபையில் பேசப்பட்டது.

    36 ஆண்டுகளாக 13 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

    கடந்த 63-ம் ஆண்டில் 39 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். பின்பு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. பின்னர் அதிகாரம் குறைக்கப்பட்டு, மத்திய அரசின் கண்காணிப்பில் வந்தது. சமூகம், நிதி, நிர்வாக ரீதியாக அதிகாரம் குறைந்துள்ளது.

    இதனால் மாநில அந்தஸ்து குரல் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளான முதலமைச்சர், அமைச்சர்கள் முடிவு எடுக்காமல் தலைமைச்செயலர், கவர்னர் முடிவு எடுக்க வேண்டிய நிலையுள்ளது.

    மத்திய அரசு தான் புதுவை நிர்வாகத்தை நடத்துகிறது. பிற்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கு கூட மத்திய அரசை நாட வேண்டியுள்ளது. பெரும்பாலான கோப்புகள் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுவதால் அதிகாரம் குறைந்துள்ளது. கவர்னரேதான் முடிவு எடுக்கிறார். முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

    கவர்னர், தலைமை செயலர், செயலர்கள் புதுவையின் மீது நிரந்தர அக்கறையின்றி செயல்படுகிறார்கள். பட்ஜெட்டுக்கு கூட மத்திய அரசுக்கு காத்திருக்க வேண்டி உள்ளது. இது ஜனநாயக முறைக்கு எதிரானது. நியாய பங்கீடு மறுக்கப்படுகிறது. பட்ஜெட்டில் உதவி என்று தரப்படுவது நியாயமற்றதாக உள்ளது.

    தமிழகத்தில் 69 சத இடஒதுக்கீடு தரப்படுகிறது. புதுவையில் இல்லை. இந்த தடையெல்லாம் நீங்க முழு தகுதியுடைய மாநில அந்தஸ்து தேவை. மத்தியில் பா.ஜனதா-காங்கிரஸ் மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் புதுவைக்கு மாநில அந்தஸ்து தரவில்லை.

    நாஜிம் (திமுக): புதுவைக்கு தற்போது மாநில அந்தஸ்து கிடைக்க அனைத்து வாய்ப்பும் உண்டு. மாநில அந்தஸ்துக்காக தொடங்கிய கட்சியின் ஆட்சி நடக்கிறது. மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தனர். கூட்டணி அறுவடை செய்யும் நேரம் இது. மத்திய பாஜக உதவியாக இருக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழுத்தலைவர் சுஷ்மா சுவராஜ் புதுவை வந்தபோது மாநில அந்தஸ்தை பரிந்துரை செய்தார்.

    நேரு (சுயேட்சை): பலமுறை தீர்மானம் நிறைவேவற்றியும் மாநில அந்தஸ்து கிடைக்காதது வருத்தம். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். பொதுநல அமைப்புகள், தொழிலாளர், இளைஞர்கள் கோஷம் எழுப்புகின்றனர். அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முழு நேர பணியாக அடுத்தக் கட்டத்துக்கு இதை கொண்டு செல்ல வேண்டும்.

    குட்டி பிரான்சான புதுவைக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. புதிய திட்டங்களுக்கான ஆய்வு கூடங்களாகி விட்டன. ரேஷன் கடை இல்லாத மாநிலமாகி விட்டது. மத்திய அரசு திட்டங்களை திணிக்கின்றன.

    78 நாடுகள் பத்து லட்சம் மக்கள் தொகைக்கும் குறைவாக உள்ளன. அவை சுதந்திரமாக உள்ளது. நாம் அடிமைப்பட்ட மாநிலமாக உள்ளோம். எனவே மாநில அரசுக்கு அதிகாரம் தேவை. அதற்கு மாநில அந்தஸ்து தேவை.

    அனிபால் கென்னடி (திமுக): சட்டப்பேரவை இல்லாத லடாக்கை நிதி கமிஷனில் சேர்த்துள்ளனர். ஆனால் புதுவையை சேர்க்கவில்லை. சொந்த வருவாயில் 63 சதவீதத்தில் உள்ளோம். வடகிழக்கு மாநிலங்களை விட நம் வருவாய் அதிகம். வருவாய் குறைவான பல மாநிலங்கள் மாநில அந்தஸ்து பெற்றுள்ளன. அதிகாரமில்லாத சுதந்திரம் இருக்கிறது. உடனடியாக அனைத்துக்கட்சித்தலைவர்கள், சட்டப்பேரவை எம்எல்ஏக்களைக் கூட்டி, பிரதமரை சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்த வேண்டும். அதற்கு திமுக உறுதுணையாக இருக்கும்.

    செந்தில்குமார் (தி.மு.க.): ஆட்சியாளர்களை தாண்டி மக்களுக்கு உரிமை வேண்டும். இரண்டாம் தர குடிமக்களாக நாம் வாழும் சூழல் உள்ளது. இந்த இழுக்கை போக்கி உரிமையுடன் கூடிய குடிமகனாக வாழவேண்டும். சுதந்திரத்துக்காக பெண்களும் அதிகளவில் பங்கேற்றனர். இது அனைவரும் போராடி பெற்ற சுதந்திரம். இந்தியாவுடன் நாம் இணைந்தோம்.

    நம்மால் சொந்த காலில் நிற்க முடியும். சட்டத்திட்டங்கள் அனைத்தும் கட்டி வைக்கும் விதமாக உருவாக்கியுள்ளனர். இவ்வளவு பிரச்சினைகளை வைத்தும் கட்டுகள் தேவையா? எனவே இந்த கட்டுகளில் இருந்து விடுபட மாநில அந்தஸ்து தேவை.

    இதைத்தொடர்ந்து மாநில அந்தஸ்து தீர்மானத்தை வரவேற்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், ஜான்குமார், அசோக்பாபு, கல்யாணசுந்தரம், வெங்க டேசன், ரிச்சர்டு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சம்பத், நாக.தியாகராஜன், என்ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், ரமேஷ், திருமுருகன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன், பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், சிவசங்கர், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஆகியோர் பேசினர்.

    மாகி, ஏனாமை இணைத்து மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

    எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

    ஒட்டுமொத்தமாக மாநில அந்தஸ்து கோரி வலியுறுத்தி விளக்கமாக பேசியுள்ளனர். பல விஷயங்களை சொல்லியுள்ளனர். நிர்வாக சிரமம் இங்கிருந்தால் தான் தெரியும். ஆளும்போதுதான் அதன் கஷ்டம் தெரியும். உரிமையும் நிலையாக கிடைக்க வேண்டும் என்றால், மாநில அந்தஸ்து மட்டுமே ஒரே வழி. பலமுறை இதை சட்டசபையில் வலியுறுத்தி உள்ளோம்.

    நாம் வலியுறுத்தி செல்லும்போது மத்திய அரசு பார்ப்போம் என்கின்றனர். இந்த சட்டசபையில் ஒரு மனதாக இவ்வளவு தெளிவாக பேசி பார்த்ததில்லை. அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினர். அவ்வளவு வலி உள்ளது.

    எனவே இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்றி, மத்திய அரசுக்கு கொண்டு சென்று மாநில அந்தஸ்து பெறுவோம். நல்ல நேரம் கூடி வந்துள்ளது.

    அனைத்தும் நல்லபடியாக நடக்கும், அதற்கான நேரம் வந்துள்ளது. மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. நமது கோரிக்கையை ஏற்று மாநில அந்தஸ்து கொடுக்கும் நிலையிலும் இருக்கிறது. எனவே இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக கொண்டு சென்று மத்திய அரசை வலியுறுத்தி வெற்றியை பெறுவோம். எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அழைத்து சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்தை பெறுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அரசே தீர்மானமாக ஏற்றதால், உறுப்பினர்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து 5 உறுப்பினர்களும் தங்களின் தனி நபர் தீர்மானத்தை திரும்பப்பெறுவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் அரசு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது வெளிநடப்பு செய்த சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு சபைக்கு திரும்பியிருந்தார். ஒட்டுமொத்த உறுப்பினர்களும் எழுந்து நின்று மேஜையை தட்டி ஆரவாரம் செய்து தீர்மானத்தை வரவேற்றனர்.

    • கொரோனவால் பெற்றோர்களை இழந்த 12 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு, சுகாதார அட்டை வழங்கியுள்ளோம்.
    • குழந்தைகள் மெட்ரிக் வகுப்புக்கு முற்பட்ட, பிற்பட்ட திட்டங்களின் கீழ் பதியப்பட்டு கருணைத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கடந்த 12 ஆண்டாக இடைக்கால பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

    இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்தார்.

    மாநில திட்டக்குழு கூட்டத்தில் வரைவு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசு புதுவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது.

    இதைத்தொடர்ந்து புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்க கவர்னர் தமிழிசை இன்று காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையிலிருந்து கார் மூலம் சட்டசபைக்கு வந்தார்.

    அவருக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வரவேற்பு அளித்தார். பின்னர் சட்டசபை வளாகத்தில் போலீசார் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சட்டசபை மைய மண்டபத்துக்கு கவர்னர் தமிழிசை வந்தார்.

    சபாநாயகர் இருக்கையில் துணை நிலை கவர்னர் தமிழிசை அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து 9.45 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சபை நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    துணை நிலை கவர்னர் தமிழிசை தமிழில் தனது உரையை பாரதியார் கவிதை வரிகளுடன் தொடங்கினார். அவரது உரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் வருமாறு:-

    சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.28 கோடியில் 6.83 லட்சம் கனமீட்டர் மணல் தூர்வரப்பட்டு துறைமுக செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. உள்வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தடுப்புச்சுவர், பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.4.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.4.88 கோடி, மழைகோட் வழங்க ரூ.60 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

    நிலமற்ற ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் 65 குடும்பத்திற்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்திர நிதியுதவி வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்படுத்தப்படுகிறது. மாத நிதியுதவியாக ரூ.ஆயிரம் வீதம் 13 ஆயிரத்து 339 பயனாளிகளுக்கு ரூ.1.33 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனவால் பெற்றோர்களை இழந்த 12 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு, சுகாதார அட்டை வழங்கியுள்ளோம்.

    இந்த குழந்தைகள் மெட்ரிக் வகுப்புக்கு முற்பட்ட, பிற்பட்ட திட்டங்களின் கீழ் பதியப்பட்டு கருணைத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    ஏற்பு ஆதரவு திட்டத்தின் கீழ் 12 குழந்தைகளுக்கு நிதியுதவியாக ரூ.11 லட்சத்து 42 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆட்சிப்பரப்பை சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய செய்து வறுமையை போக்குவதில் அரசு உறுதியாக உள்ளது.

    அனைத்து பிராந்தியங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளை துல்லியமாக விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளித்து பிராந்திய ஏற்ற தாழ்வுகளை போக்கியுள்ளது.

    ஆட்சிப்பரப்பில் செயல்படுத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான ஆதரவையும், பரிந்துரைகளையும் உறுப்பினர்கள் நல்குவீர்கள் என உறுதியாக நம்புகிறேன். இந்த அரசால் மக்களுக்காக தொடங்கப்படும் அனைத்து பணிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் உரையாற்றினார்.

    • பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 9-ந் தேதி காலை 9.45 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றுகிறார்.
    • தொடர்ந்து 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் வழக்கமாக மார்ச் மாதம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    கடந்த 12 ஆண்டாக பல்வேறு இடையூறுகளால் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்தார்.

    கடந்த மாதம் கவர்னர் தமிழிசை தலைமையில் திட்டக்குழு கூடி 2023-24-ம் ஆண்டுக்கு பட்ஜெட் தொகையாக ரூ.11 ஆயிரத்து 600 கோடியை நிர்ணயம் செய்தது.

    இதற்கான அனுமதிகோரி கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 3-ந் தேதி புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் நடந்தது.

    தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 9-ந் தேதி காலை 9.45 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றுகிறார். தொடர்ந்து 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.

    13-ந் தேதி காலை 9.45 மணிக்கு நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    கவர்னர் உரைக்கு பிறகு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் சபையை நடத்துவது என முடிவு செய்யும். சட்டசபை நீண்டநாட்கள் நடைபெறும். வித்தியாசமான சட்டமன்றமாக இருக்கும். 10 சதவீத அரசு அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என கூறிவந்தேன்.

    அதேநிலை தற்போதும் நீடிக்கிறது. இத்தகைய அதிகாரிகளுக்கு சட்டசபையில் உரிய தண்டனை அளிக்கப்படும். திட்டங்களை கெடுப்பது உள்ளூர் பி.சி.எஸ். அதிகாரிகள்தான். அவர்கள் திட்டங்களுக்கான கோப்புகளில் எதிர்மறையான கருத்துகளை எழுதுகின்றனர். இத்தகைய அதிகாரிகளுக்கு சட்டசபையில் தண்டனை அளிக்கப்படும்.

    3 அரசு துறைகள் 50 சதவீதத்துக்கும் குறைவாக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை செலவு செய்துள்ளனர். அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். மார்ச் மாதம் இறுதிக்குள் நிதியை முழுமையாக செலவு செய்வதாக உறுதியளித்துள்ளனர். சிறப்புக்கூறு நிதியும் முழுமையாக செலவிடவில்லை. இதையும் செலவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்தவர் அமைச்சர்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து புதுவை மாநில வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசி வருகின்றனர்.
    • புதுவை அரசு கோரியுள்ள நிதிக்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

    புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு செலவீனங்களுக்கு மட்டுமே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. தற்போது 2023-24-ம் நிதியாண்டுக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார்.

    இதற்காக அனைத்து துறைகளும் முழு வீச்சில் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதையொட்டி கடந்த 26-ந்தேதி மாநில திட்டக்குழு கூடி ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு பட்ஜெட் திட்ட வரையறையாக மத்திய அரசின் உள்துறை மற்றும் நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பட்ஜெட்டில் புதுவைக்கான மத்திய அரசின் நிதியுதவி ரூ.3.117.17 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதையடுத்து புதுவை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்தவர் அமைச்சர்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து புதுவை மாநில வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசி வருகின்றனர்.

    இதனால் புதுவை அரசு கோரியுள்ள நிதிக்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×